பெண்ணே பேசு! மங்கையே மனம் திற! - ரா.சுஜானந்த் பரத் (1st BA LLB)


(மகளிர் தின சிறப்பு சிந்தனை)

 

 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நாளில் பெண்களுக்கு என சிறப்பாக போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்றவருக்கு பரிசு மற்றும் மாலை மரியாதை வழங்கி சிறப்பிப்பர். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள வரலாறு பலருக்கும் தெரியவில்லை என்பதே மனவருத்தத்தைத் தருகிறது.1908 ஆம் ஆண்டு அமெரிக்காவில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் முழு நேர வேலை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என பெண்கள் போராட்டம் நடத்தினர்.50 க்கும் மேற்பட்ட பெண்கள் பஞ்சாலையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தன் உயிரை தியாகம் செய்தனர். அதன் பொருட்டு 1910 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த மாநாட்டில் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த வரலாற்றை முதலில் பெண்கள் ஆழமாக அறிய வேண்டும்.அன்றாட வாழ்வில் நாம் செய்தித்தாளை வாசிக்கும் பொழுது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து செல்வதை காண்கிறோம். இதற்கு வயது வரம்பே இல்லை. இளம் குமரி முதல் வயதான கிழவி வரை அனைவரும் பட்டியலில் சேருவர்.பாலியல் வன்கொடுமையில் துவங்கி பண்பட்ட மனதைக் கெடுப்பது, பேச்சிலே வன்மை, பேரன்பு காட்டுவது, உள்ளத்தில் உணர்ச்சிகளை வளர்ப்பது,உடலால் வருத்துவது, கடுஞ்சொற்களால் மிரட்டுவது,மன உளைச்சல் ஏற்படுத்துவது என தொடர்ந்து இறுதியிலே கொலை செய்வது அல்லது தற்கொலைக்கு தூண்டுவது என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து சமூகத்தில் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

 


 

பெண்ணே!

முதலில் நீ மனதளவில் உறுதியாய் இரு!ஊக்கத்தை விதை! அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். உன்னால் முடியும் உள்ளத்தால் நினை! எவரையும் கண்டு அஞ்சி ஓடாதே!கெஞ்சி பேசாதே!

துணிந்து நில்!

எதையும் வெல்!

 

 

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப் பில்லைகாண் என்று-கும்மியடி

     -மகாகவி பாரதியார்

 

 சக மனிதருக்கு நடக்கும் அவலங்களை தட்டிக் கேள்.ஒருவேளை, நாளை உன் உறவுகளுக்கும் இதே இன்னல் ஏற்படலாம். கற்கும் கல்வியை சீர் வர கற்றுக்கொள். கற்றதை மற்றவருக்கு பகிர்.உன்னைப் போல ஒரு பெண்மணி தான் பிரேமா ரேவதி. சந்திக்காத இடையூறுகள் இல்லை, இன்னல்கள் இல்லை. இப்பெண்மணி முதன் முதலில் நிருபராக பணியாற்றி வந்தார். பின்னர் சமூக வேலைப்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தைகள் என்றால் நெருக்கமாக பழகும் குணமுடையவர். அப்படி ஒரு முறை சமூக சேவை செய்ய நாகை சென்றிருந்தார். அப்போதுதான் இவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பெண் கையில் கைக்குழந்தையோடு வந்து இவரிடம் உணவு கேட்டார். இவர் அந்தப் பெண்ணிடம் பேச துவங்கும் போது திடீரென அந்த பெண் ஓடினாள். அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்றார் பிரேமா ரேவதி அவர்கள். இவரைப்போலவே நிறைய பெண்கள் குழந்தையோடும் சின்னஞ் சிறார்களோடும் மைதானத்தில் அமர்ந்து இருந்தனர். திடீரென 'அழுகல்' ஒலி ஏற்பட்டது. கூட்டத்தில் ஒரு குழந்தை உணவு இல்லாமல் இறந்துவிட்டது என தெரிய வந்தது.மனம் உடைந்து அனைவரும் அழத் தொடங்கினர். மேற்கொண்டு பிரேமா, அவர்களிடம் பேசும் போது தெரியவந்தது அவர்கள் பட்டியல்  சாதியினர் என்றதாலும் குடி பெயர்ந்த மக்கள் என்றாதாலும் அரசு சலுகைகள் மட்டுமின்றி சக மரியாதை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என ஒரு பெண் அழுத நிலையில் கூறினாள். ஒரு மாட்டை அலங்கரித்து அதனை அழைத்துச் சென்று பூம் பூம் மாடு என காண்பிக்கிறோம், என்றால் ஒரு பெண்மணி.

 

 

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

          -சட்ட மேதை அம்பேத்கார்

 

 

 பிரேமா அவர்கள் வானவில் என்ற பள்ளியை துவங்கி தானே அந்த குல சிறார்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுத்தார். அனைவருக்கும் அந்தப் பெண்ணே சமைத்து உணவளித்தாள். படிப்பின் ஈரமே அறியாத பூம் பூம் மாடு வளர்ப்பவர்கள் சங்கதிகளில் பற்பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை பிரேமா ரேவதி அவர்களையே சாரும்.

 இவரின் வரலாறு எமக்கு அமெரிக்க பெண் மேரி மெக்லி யோட் பெத்யூன் வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

 

 இதனைத் தொடர்ந்து இன்னும் பற்பல பெண்கள் சாதனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

 திமிர்ந்த ஞானச்

செருக்கும் இருப்பதால் செம்மை மாதர்

-திறம்புவதில்லை

      - மகாகவி பாரதியார்

 

 சாத்தான்குளம் அருகே 90 வயது நிரம்பிய மூதாட்டி இட்டலிக் கடை நடத்தி வருகிறார்.பசி என்று தன்னைத் தேடி வருபவருக்கு பணமில்லாமல் உணவளிக்கிறார். கை தளர்ந்த போதிலும் மனம் தளராமல் உழைக்கும் இந்த பாட்டிக்கு "அன்னம் பாலிக்கும் கை"என்று விருது வழங்கப்பட்டது.

 

 

 பெண்ணே!உன்னை நோக்கி எதிர்த்து எது வந்தாலும் நின்று எதிர்கொள்;

 

 

ஆணும் பெண்ணும் சமமே!கல்வியினால் அது நிஜமே!

 

 

இந்நிலையில் நீ படிப்பதற்கு எண்ணற்றோர் குருதி சிந்தியுள்ளனர்;அதனை கருதி உழை!

 

 ஒரு பெண் வலிமையானவள் என்று ஒவ்வொரு பிரசவ காலத்திலும் அவள் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறாள்.

 

 மகளிர் தினம் ஒரு நாள் மட்டுமல்ல-ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும்.

 

 எல்லாருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை;வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை;

 -கிங்மேக்கர் காமராசர்

 

 

 இன்று உனக்கு நடப்பது நாளை உனது உறவுகளுக்கு நடக்காமல் இருக்க, பேராற்றலோடு

பெண்ணே நீ பேசு!!

 மங்காத குரலோடு மங்கையே நீ மனம் திற!!!

 

           -ரா.சுஜானந்த் பரத் (இளங்கலை சட்டம் முதலாமாண்டு)

 

                                  நன்றிகள் பல!

Previous Post Next Post

Contact Form